Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Wednesday, February 4, 2009

[புத்தக மதிப்புரை] மின்சார பூ & கிறுகிறுவானம்

மின்சார பூ

கிராமங்களுக்கு பல முகங்கள் இருக்கின்றன. சில பொழுதுகளில் அவை மந்தகாசமான மணத்துடனும் மற்றும் பல நாட்களில் பாலையின் தகிப்பு அங்குள்ள செடி கொடி முதல் மக்கள் மனங்கள் வரை நிறைந்திருக்கும் வண்ணமும் அமையப்பெற்றிருக்கும்!
சிற்றூர்களில் வசிக்கும் மனிதர்களையும் அவர்களது இயல்புகளையும் இயல்பான நடையில் வாசகர்களை சென்றடையும் வகையில் எழுதுபவர்களில் முக்கியமானவர் மேலாண்மை பொன்னுசாமி! அவரின் கதைகளை படிக்கையில் அந்த கந்தக பூமியின் வெப்பத்தையும் கள்ளமில்லா மனிதர்களின் சுபாவத்தையும், மிருக மனம் கொண்டோரின் நிதர்சனங்களையும் அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வே எஞ்சி நிற்கும்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற மின்சார பூ என்ற தொகுப்பு பல சிறுகதைகளை உள்ளடக்கியது! இவரின் கதை மாந்தர்கள் சமூகத்தாலும் சடங்குகளாலும் கீழ் நிலையில் வைக்கப்பட்டோர்! வருடத்திற்கொரு முறை பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே சுடு சோறு சாப்பிடகூடிய நிலையில் உள்ளவர்கள்! காலத்தின் கட்டாயத்தாலும் வயிற்றின் தேவைகளுக்காகவும் பல கட்டங்களையும் கண்டங்களையும் தாண்டி வருபவர்கள்! அவற்றில் சிலர் காலத்தை வென்று நிற்கும்படியும் மற்றோர் அதன் சூழலில் மாட்டிக் கொள்பவர்களாகவும் பல்வேறு குணாதிசயங்களுடன் நம்மிடையே வலம் வருகின்றனர்!
மின்சார பூ என்ற சற்றே பெரிய சிறுகதை பல உணர்ச்சிகளின் கலவையாக அமைந்துள்ளது! உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி சிறுவர்களிடையே வேர் விடும் ஆழமான அன்பு, எளியோரை வலியோர் நடத்தும் விதம், சிறுவர்களின் மனதில் சிறுவயதிலையே விழும் அவமான காயம், குற்றவுணர்ச்சி ஆகிய பலவற்றையும் அருமையான விதத்தில் மனதை சுடும் முடிவுடன் எழுதியுள்ளார்!



கிறுகிறுவானம்


தட்டாமாலை சுற்றி நிற்க முடியாமல் அப்படியே மயங்கி கிறங்கி மண்ணில் சரிகையில் நம் கண் முன்னே விரியும் எல்லா காட்சிகளையும் ஒழுங்குபடுத்தி கூற முடியுமா? அது போல தான் சிறுவர்களின் மனதில் தோன்றும் எண்ணங்களும்! ஒரு பொருளை வளர்ந்தவர்கள் பார்ப்பதற்கும் சிறுவர்களின் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன! குழந்தை பேச தொடங்குகையில் அதன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காத்திருந்து அகம் மகிழும் நம்மில் பலரும் அவர்கள் பேச தொடங்கியபின் சொல்லும் பல விஷயங்களை காது கொடுத்தே கேட்பது இல்லை! எனவே அவர்கள் கண்ணில் படும் எல்லா பொருள்களுடனும் சிநேகம் கொண்டு பேச தொடங்குகிறார்கள்!
S.ராமகிருஷ்ணனின் கிறுகிறுவானம் என்ற கதை ஒரு சிறுவன் பேசுவது போன்ற நடையில் எழுதபட்டிருக்கிறது! அவனுக்கு விருப்பமான விஷயங்களை பற்றியும், அவன் பார்வையில் இருள், மேகம் போன்ற பொதுவான விஷயங்களை பற்றியும் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்! இந்த கதையை படிக்கையில் சுஜாதாவின் பூக்குட்டி என்ற கதை நினைவில் தோன்றி மறைந்தது! ஒரு பணக்கார சிறுமிக்கு (விம்மு), சேரியில் வசிக்கும் ஒரு வறுமையில் வாடும் குடும்பத்தின் சிறுமியுடனும் (வேலாயி) அவளின் நாயிடமும்(பூக்குட்டி) ஏற்படும் பிரியமும் அது மறுக்கப்படும்போது அவளிடம் உடல் ரீதியாகவும் மனதிலும் ஏற்படும் குறைபாடுகளை மிக அருமையாக சொல்லி இருப்பார்!
சமூகத்தின் தவறான படிப்பினைகளும், சட்ட திட்டங்களும் சற்றும் பாதிக்காதது சிறுவர் சிறுமியரை தான்! நாம் போடும் சாதி மத, ஏழை பணக்கார கட்டுகள் சிறுவர்களை என்றுமே நெருங்க முடியாது! கள்ளத்தனம் இல்லாத அந்த பருவம் இன்னும் சில நாள் இருந்திருக்க கூடாதா என தோன்றும் எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை!

எஸ்.ராவின் வலைத்தளம்: http://sramakrishnan.com/

படிக்க ரசிக்க:
மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி – ரூ. 70 – கங்கா பதிப்பகம்
கிறுகிறுவானம் – எஸ். ராமகிருஷ்ணன் – ரூ. 25 – பாரதி புத்தகாலயம்

Tuesday, January 20, 2009

32வது சென்னை புத்தக திருவிழா - 2009

வருடம் ஒருமுறை வரும் பண்டிகைகள் தான் பொங்கலும் தீபாவளியும் ஊர் திருவிழாக்களும்.. ஆயினும் ஒவ்வொருமுறையும் ஆரவாரமாக அதற்காக தயாராகிறோம் இல்லையா? வருடம் ஒரு முறை பார்த்தவற்கே அப்படி எனில் முதன்முறையாக அப்படி ஒரு அனுபவத்திற்கு தயார் ஆகுபவரின் மன நிலை எப்படி இருக்கும் என யூகிக்க முடிகிறதா?ஆம்! அப்படி தான் நான் புத்தக கண்காட்சிக்கு காத்திருந்ததும்!

யோசித்து பார்க்கையில் திருவிழாவிற்கு காத்திருந்த சிறுமி என்ற உவமை மிகவும் தவறு என்றே தோன்றுகிறது!இது அதற்கும் மேலே! மிக சரியாக சொல்வதானால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விடுமுறைக்கு வரும் என் தந்தைக்காக காத்திருந்த மனநிலையில் தான் இருந்தேன்!! மகிழ்வுடன் எதிர்பார்ப்புகளை தேக்கி வைத்து!

தேதிகள் அறிவிக்கபடுவதற்கு முன்பே என் விருப்ப பட்டியல் தயாராகிவிட்டது! ஆங்கில புத்தகங்கள் எனக்கு நகலே போதுமானது என்பதாலும் அவற்றை moore மார்க்கெட்டில் வாங்கி கொள்ளலாம் என்பதாலும் இம்முறை தமிழ் புத்தகங்களை மட்டுமே அள்ளி வருவது என முடிவு செய்திருந்தேன்! பட்டியலை இறுதி செய்வதற்கு முன் அம்மாவிற்கும் அக்காவுக்கும் தொடர்பு கொண்டு தேர்வுகளை உறுதி செய்துகொண்டேன் ஏனெனில் பலமுறை நானும் அக்காவும் ஒரே புத்தகத்தை வாங்கியது உண்டு! அம்மாவின் விருப்பங்களுடன் பட்டியல் மெருகேறியது!

இனி தாக்குதல் தான் :)

இரு முறை கண்காட்சிக்கு செல்வது என வைத்திருந்தேன்! முதல் முறை வாங்குவதற்கு; அடுத்த முறை அனுபவத்திற்கு (இரண்டாம் முறை புத்தியை ஓரம்கட்டி மனது வென்றது 5 புத்தகங்களை ;))

கண்காட்சி - சில குறிப்புகள்:

1. பொன்னியின் செல்வன் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.. பல பிரிவுகளில் கல்கியின் புத்தகங்கள் சடுதியில் விற்று தீர்ந்தன!
2. சுய முன்னேற்ற புத்தகங்களை புரட்டுபவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது!
3. வழக்கம் போலவே கண் - காட்சிக்காக (window shopping??) மட்டுமே வந்தவர்கள் கூட்டமும் அதிகம்
4. அதிக விற்பனை நடந்த பிரிவுகளாக பஜ்ஜி/போண்டா/கடலை கடைகள் அறியப்பட்டிருக்கும்.
5. ஒரே புத்தகத்தை பல முறை எடுத்த பெண்களையும், ‘இதான் நம்மகிட்ட இருக்கே da’ என்ற ஆண்களையும் காண முடிந்தது!
6. எனக்கு திசைகளை கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.

குறிப்பு: என்ன புத்தகங்கள் என குறிப்பிடவே இல்லையே? என கேட்பவர்களுக்கு: நான் வாங்கிய புத்தகங்கள் அவற்றை பற்றிய விமர்சனங்கள் வரும் வாரங்களில்!!!!